வேலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாடு விடும் விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று (ஜன.24) நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழு உறுப்பினர் எஸ்.கே. மிட்டல் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த மிட்டல், “வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாடு விடும் விழாக்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம் மாடு விடும் விழா நடத்த தற்காலிகமாக தடை விதித்தது. இந்த துணிச்சலான முடிவிற்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி விழாக் குழுவினர், காளைகளின் உரிமையாளர்கள், மாடு விடும் விழாவில் கலந்து கொள்ளும் பொது மக்கள் தாங்களாக முன்வந்து கட்டுப்பாடுகளுடன் நடந்துகொள்ளவேண்டும். மாடு விடும் விழாக்களில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் காயம் அடைந்து வருவதாக செய்திகள் வருகின்றன.
இது தவிர்க்கப்படவேண்டும். ஜாலியாக மாடு விடும் விழா காண வருகிறீர்கள். ஆனால், ஒரு சில உயிரிழப்புகள் ஏற்பட்டு சோகமாக செல்லும் நிலை உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் கவலை அளிக்கிறது. வேலூர் மாவட்டத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளுடன் கரோனா விதிகளை கடைபிடித்து மாடு விடும் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. மீண்டும் விதிமீறல்கள் ஏற்பட்டால், உச்சநீதிமன்ற உதவியுடன் இரண்டு ஆண்டுகளில் இதுபோன்ற மாடு விடும் விழாக்கள் நடத்த முற்றிலும் தடை விதிக்கப்படும்" எனக் கூறினார்.
இக்கூட்டத்தில் ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் என பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கருணாநிதி போட்டோ மாட்டுவீங்க... மோடி போட்டோ வைக்க மாட்டீங்களா...?வீடியோ வைரல்