வேலூர் மாவட்டம், குடியாத்தம் மோர்தானா அணையின் முழு கொள்ளளவான 11.50 மீட்டரில் 11.40 மீட்டரை எட்டியுள்ள நிலையில், அடுத்த ஐந்து நாள்களுக்கு வேலூர் மாவட்டத்தில் கனமழை பெய்யக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மோர்தானா அணையின் நீர்பிடிப்பகுதிகளில் கனமழை பெய்து, அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டால், கௌவுண்டன்யா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆகவே கௌவுண்டன்யா ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள மோர்தானா, கொட்டாரமடுவு, ஜிட்டப்பள்ளி, சேம்பள்ளி, ஜங்காலப்பள்ளி, உப்பரப்பள்ளி, தட்டப்பாறை, ஆண்டகான்பட்டி, ரங்கசமுத்திரம், ரேணுகாபுரம், அக்ராவரம், பெரும்பாடி, மீனூர், மூங்கப்பட்டு, சீவூர், குடியாத்தம் நகரம், இந்திரா நகர், ஒலக்காசி, சித்தாத்தூர் மற்றும் ஐதர்புரம் கிராமங்களில் ஆற்றின் கரையோரம், தாழ்வான பகுதியில் வசித்துவரும் பொதுமக்கள், மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும், கனமழை நேரத்தில் கௌவுண்டன்யா ஆற்றில் எந்நேரமும் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், அங்கு குளிப்பது, துணிகள் துவைப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும், கௌவுண்டன்யா ஆற்றில் சிறுவர்களை குளிக்கவோ அல்லது விளையாடவோ பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது எனவும் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொறுப்பு) கேட்டுக் கொண்டுள்ளார்.