திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் இவ்விழா கடந்த டிசம்பர் 3ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த பத்து நாள்களாக பகல்பத்து வைபவம் நடந்தது.
பத்து நாள் வைபவம்
இதில், உற்சவர் நம்பெருமாள் தினமும் ஒரு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பகல் பத்து வைபோகத்தின் முதல் நாளான (டிசம்பர் 4) உற்சவர் நம்பெருமாள் கவரிமான் தொப்பாரைக் கொண்டை, தங்க கிளியுட இரத்தின அபயஹஸ்தம், கலிங்கதுரா, பவளமாலை, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, புஜ கீர்த்தி, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
இரண்டாம் நாள் (டிசம்பர் 5) நம்பெருமாள் சவுரிக் கொண்டை, வைர அபயஹஸ்தம் , வைரகாதுகாப்பு, தங்க கிளி, நெல்லிக்காய் மாலை, பவள மாலை, தங்க பஞ்ஜாயுத மாலை, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
மூன்றாம் நாள் (டிசம்பர் 6) நம்பெருமான் அலங்கார கொண்டை அணிந்து, காசு மாலை, திருமார்பில் அழகிய மணவாளன் பதக்கம், மகாலட்சுமி பதக்கம், வைரஅபயஹஸ்தம், முத்துச்சரம், வைர ஒட்டியானம், ரத்தின திருவடி அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி எழுந்தருளினார்.
நான்காம் நாள் (டிசம்பர் 7) நம்பெருமாள் தொப்பாரைக் கொண்டை, இரத்தின அபயஹஸ்தம் , வைர காதுகாப்பு, முத்துச்சரம் , காசு மாலை அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு எழுந்தருளினார்.
ஐந்தாம் நாள் (டிசம்பர் 8) நம்பெருமாள் ரத்தின பாண்டியன் கொண்டை, வைர அபயஹஸ்தம், வைரகைக் காப்பு,விமான பதக்கம், நெல்லிக்காய் மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்களஅணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.

ஆறாம் நாள் (டிசம்பர் 9) நம்பெருமாள் நீள்முடிகிரீடம், ரத்தின அபயஹஸ்தம், லட்சுமி பதக்கம், முத்துச்சரம், காசு மாலை அலங்காரத்தில் எழுந்தருளினார்.
ஏழாம் நாள் (டிசம்பர் 10) நம்பெருமாள் முத்துசாய்வு கொண்டை, கபாய் சட்டை, வைர அபயஹஸ்தம், அடுக்கு பதக்கம், முத்துச்சரம் அலங்காரத்தில் எழுந்தருளினார்.
எட்டாம் நாள் (டிசம்பர் 11) நம்பெருமாள் முத்து கிரீடம், இரத்தின அபயஹஸ்தம், அடுக்கு பதக்கம், இரத்தின மகர ஹண்டிகை, முத்துச்சரம், அலங்காரத்தில் எழுந்தருளினார்.
ஒன்பதாம் நாளான நேற்று முன்தினம் (டிசம்பர் 12) நம்பெருமாள் முத்து பாண்டியன் கொண்டை, முத்து அபயஹஸ்தம், காதுகாப்பு, முத்தங்கி, அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பத்தாம் நாளான நேற்று (டிசம்பர் 13) நம்பெருமாள் ரத்தினக்கிளி, தலையில் நாகாபரணம், பவளமாலை, அடுக்கு பதக்கம், ஏலக்காய் ஜடை தரித்து ஆகியவற்றுடன் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளினார்.

சொர்க்க வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி, விழாவின் முக்கிய வைபவமான பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறப்பு இன்று (டிசம்பர் 14) அதிகாலை நடைபெற்றது. இதற்காக, மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் அதிகாலை 3.30 மணிக்கு விருச்சிக லக்கினத்தில் ரத்தினங்கி அலங்காரத்துடன் புறப்பட்டார். அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது.
கோவிந்தா கோவிந்தா... ரங்கா ரங்கா... கோஷத்துடன் நம்பெருமாள் பரமபத வாசலை கடந்தார். பின்னர், ஆயிரங்கால் மண்டபம், திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்பட ஏராளமானோர் சொர்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

முன்னதாக, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. காலை 7 மணிமுதல் மூலவர் சேவைக்கும், சொர்க்கவாசல் சேவைக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
விழா முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவில் சுற்றுப்புறம் மற்றும் கோவில் உள்புறத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.