திருச்சியில் கள்ளத்துப்பாக்கியை விற்பனை செய்ய முயன்ற காவலர் பரமேஸ்வரனை, கடந்தாண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக பரமேஸ்வரன் மீது திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரிடமிருந்து, இரண்டு துப்பாக்கிகள், பத்து தோட்டக்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
பின்னர் வழக்கு சிபிசிஐடி பிரிவிற்கு மாற்றப்பட்டு காவலர் பரமேஸ்வரனின் கூட்டாளிகளான நாகராஜ், சிவா, எட்டப்பன், கலைசேகர், திவ்யபிரபாகரன், கலைமணி ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுக்கு துப்பாக்கி விற்பனை செய்த மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமுராரி திவாரி என்பவரையும் சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்தனர்.
பின்னர் அவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்த பன்சிங் தாக்கூர் என்பவரை பல முறை மத்தியப் பிரதேசம் சென்று தேடியும் அவர் சிக்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த பன்சிங் தாக்கூர் போபாலில் தங்கியிருப்பதாக சிபிசிஐடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, போபால் சென்ற காவல் துறையினர் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி பன்சிங் தாக்கூரை கைதுசெய்தனர்.
கடந்த திங்கள்கிழமை பன்சிங் தாக்கூரை திருச்சிக்கு அழைத்துவந்த சிபிசிஐடி காவல் துறையினர், அவரை நேற்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: வீட்டில் கள்ளத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த பெண் கைது!