திருச்சி: திருச்சி மாநகர பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றன. இதில் பெரும்பாலான தனியார் பேருந்துகளில் விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஏர்-ஹாரன் பொருத்தி உள்ளார்கள்.
இதனையடுத்து, அதிலிருந்து எழுப்பப்படும் ஒலி அரசு மருத்துவமனை இருக்கின்ற பகுதிகளிலும், பொதுமக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளிலும் மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன.
இந்நிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல் துறையினர், திருச்சி மாநகரில் இயங்கி வரும் தனியார் பேருந்துகளை, நேற்று (பிப்.08) திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, 15க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர்-ஹாரன்கள் பொருத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
அதனைதொடர்ந்து, உடனடியாக ஏர்-ஹாரன்கள் அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதுடன், இதுபோன்ற ஹாரன்களை பயன்படுத்தக்கூடாது எனவும் மீண்டும் பயன்படுத்தினால் பேருந்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் போக்குவரத்து காவல் துறையினர் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும், அவர்களுக்கு அபாரதமும் விதிக்கப்பட்டது.
திடீரென தனியார் பேருந்துகளை நிறுத்தி காவல் துறையினர் ஆய்வில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பானது.
இதையும் படிங்க: மீனாட்சி அம்மன் கோயில் மாசி உற்சவம் சுற்றுக் கொடியேற்றம்!