திருச்சிராப்பள்ளி: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், “தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு, விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 2ஆம் தேதி முதல் தொடர் மறியல், சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். இளநிலை ஆய்வாளர் பதவியிலிருந்து முதுநிலை ஆய்வாளராகப் பதவி உயர்வு செய்யும் போது பதவி உயர்வு மூலம் 25 விழுக்காடு, நேரடி நியமனம் மூலம் 25 விழுக்காடு எனக் கடைப்பிடிக்கப்படும் விகிதாச்சாரத்தை மாற்ற வேண்டும்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 15ஆம் தேதி கோரிக்கை அட்டை அணிந்தும், மார்ச் 15 இல் மாநிலப் பதிவாளர், துறைச் செயலரிடம் மாவட்ட, மாநில நிர்வாகிகள் முறையீடு செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் மு. செளந்தரராஜன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் பா.சிவக்குமார் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். கடந்த கால செயற்பாடுகள் குறித்து மாநிலப் பொதுச் செயலர் வெ. செல்லையா அறிக்கை சமர்ப்பித்தார்.