தமிழ்நாடு முழுவதும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல், திருப்பூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
நாமக்கல்: தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், 'உள்ளாட்சி திட்டங்களை செயல்படுத்துவதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அலுவலர்களும், புதிய உள்ளாட்சி பிரதிநிதிகளும் பிரதிபலன் பாராமல் மக்கள் பணியாற்ற வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில் மல்லசமுத்திரம், எருமப்பட்டி, எலச்சிபாளையம், கொல்லிமலை, கபிலர்மலை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்: பல்லடம் அருள் புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான ஒருநாள் பயிற்சிக் கூட்டத்தினை திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
இந்த பயிற்சி முகாமில் கிராம ஊராட்சி அமைப்புகள், கிராம ஊராட்சி நிர்வாகத்திற்கு வரையறை செய்யப்பட்டுள்ள முக்கியக் கூறுகள், பயணப்படி அமர்வு, கிராம ஊராட்சி கடமைகளும் பொறுப்புகளும் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவருக்கான அதிகாரங்கள் பற்றியும் ஊராட்சித் தலைவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
திருவண்ணாமலை: கிராம ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஒருநாள் பயிற்சி தொடக்க விழா நிகழ்ச்சியில் திமுகவினர் வெளிநடப்பு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தங்களுக்கு உரிய மரியாதை மற்றும் இருக்கைகள் கொடுக்கவில்லை எனக் கூறி, திமுகவைச் சேர்ந்த திருவண்ணாமலை ஒன்றியத் தலைவர் கலைவாணி, கலைமணி மற்றும் ஒன்றிய துணைத் தலைவர் பாரதி, ரமணன் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படிங்க: ஒரு நாளில் 40, சில வாரங்களில் 150: மாஸ் காட்டும் ஆப்கன் ராணுவம்