தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கிளாக்குளம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுடலையாண்டி வயது (42). இவர் கூலித்தொழில் செய்துவருகிறார். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் ஆகி மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஆனால் சுடலையாண்டிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இவர் அடிக்கடி மதுஅருந்தி வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சுடலையாண்டி மது அருந்தி மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது.
இதில் விரக்தி அடைந்த அவர் விஷம் அருந்தி ஊர் எல்லை அருகே படுத்துக்கொண்டார். இதன்பின்னர் தனது நண்பர் ஒருவருக்கு போன் செய்து நான் விஷம் அருந்திவிட்டேன் உடனடியாக என்னை காப்பாற்றும்படி சுடலையாண்டி கூறியுள்ளார்.
இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று சுடலையாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.