திருநெல்வேலி: வ.உ.சிதம்பரனாரின் 151ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் அமைந்துள்ள அவரது மணிமண்டப திருவுருவச்சிலைக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச்சந்தித்த சட்டபேரவைத்தலைவர் அப்பாவு, 'முதலமைச்சர் அறிவித்தபடி 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வ.உ.சி மணி மண்டபத்தில் ஒலி - ஒளிக்காட்சிகள் மூலம் அவரது வரலாற்றை அனைவரும் காணும் வகையிலான திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
வ.உ.சி 150ஆவது பிறந்த நாள் விழா மற்றும் பாரதியார் 100ஆவது நினைவு தினம் ஆகியவையையொட்டி அவர்கள் இருவர் படித்த பள்ளியில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நினைவு வளைவானது முதலமைச்சர் உத்தரவின்பேரில் அமைக்கப்பட உள்ளது.
வ.உ.சிதம்பரனார் மற்றும் பாரதியார் ஆகியோரது தியாகங்களை நினைவுபடுத்தும் வகையில், முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது அவர்களை பெருமைப்படுத்தும்படியாகவுள்ளது' என்றார்.
மேலும், அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் தொடர்பாக பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அப்பாவு, 'அதிமுக விவகாரம் நாட்டுக்கு முக்கியமான விஷயமல்ல. அதிமுகவில் நடப்பது உட்கட்சி விவகாரம். அதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
அதிமுகவில் பல பிரிவுகளாக அவர்கள் உள்ளனர். எந்த பிரிவு சரி, தவறு என்பது குறித்து நீதிமன்றத்தை அவர்கள் நாடி உள்ளனர். அதற்கு மேல் தேர்தல் ஆணையம் உள்ளது. அதிமுக கொறடா கொடுத்த மனு மீதான நடவடிக்கை சட்டப்பேரவை நடக்கும்போது தெரியும்' எனத் தெரிவித்தார்.
இந்த ஆட்சியில் சட்டப்பேரவை ஜனநாயக முறைப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சரியான முறையில் ஜனநாயக நடவடிக்கையின் அடிப்படையில் முடிவுகள் இருக்கும்' என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்த ரெய்னா... வருத்தத்தில் ரசிகர்கள்