திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் பாண்டிய மன்னர்கள் காலத்துக் கோட்டை அமைந்துள்ளது. இக்கோட்டை ஆங்கிலேயர் காலத்திலிருந்து காவல் நிலையமாக செயல்பட்டு வந்தது. இந்தக் கோட்டையானது மேற்கு கொத்தளம் என அழைக்கப்பட்டு வருகிறது. இதனை மேடை காவல் நிலையம் என்றும் அழைப்பர்.
இந்தக் கோட்டையின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி சீர்மிகு திட்டத்தின்கீழ் 3.6 கோடி ரூபாய் மதிப்பில் இதனை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியினை சபாநாயகர் அப்பாவு , தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேற்று (டிசம்பர்2 7) தொடங்கிவைத்தனர்.
புதுப்பொலிவுடன் மேடை காவல் நிலையம்
இக்கோட்டையின் உள்ளே இருக்கை வசதிகள், கட்டடங்களைச் சுற்றி இருக்கை வசதிகள், பழங்கால வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் எட்டு இடங்களில் சுதந்திர சுவர்கள், அலங்கார விளக்குகள், படிக்கட்டுகளில் அபிவிருத்திப் பணிகள், கழிப்பிட வசதிகள் மற்றும் 345 சதுர மீட்டர் அளவிற்கு வரலாற்றுப் பூங்காவிற்கு இடம் ஒதுக்கீடு போன்ற பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் ரூ. 1.25 கோடி மதிப்பில் இரண்டாவது ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், திருநெல்வேலி மாவட்டத்திற்குத் தேவையான உச்சபட்ச ஆக்ஸிஜன் கிடைக்கும். குறிப்பாக, 700 கிலோ லிட்டர் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் உற்பத்தியில் திருநெல்வேலி தன்னிறைவுடன் உள்ளது. முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின் பண்பாட்டுச் சின்னங்கள், தமிழர்களின் தொன்மையான நாகரீகம், கலாசாரம் ஆகியவற்றை வெளிக்கொண்டு வருவதற்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
பொருநை அருங்காட்சியகம்
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தபடி ரூ. 15 கோடியில் சர்வதேச தரத்துடன் பொருநை அருங்காட்சியகம் நெல்லையில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கையும் தயார் செய்யப்பட்டு விட்டது. கூடிய விரைவில் பணிகள் தொடங்கும்.
பாளையங்கோட்டை மேடை காவல் நிலையம் இதற்கு முன்னதாக போர்க்களத்தின் கோட்டை கொத்தளம் ஆக இருந்தது. இதனைப் பராமரித்துப் பாதுகாக்கும் வகையில் ரூ. 3 கோடியே ஆறு லட்சம் செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு சுற்றுலாத் தலமாக மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை இன்னும் ஆறு மாத காலத்திற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டியில் தொல்லியல் மேட்டு பகுதியில் அகழ்வாய்வு செய்ய ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைக்கப்பெற்றவுடன் பணிகள் தொடங்கப்படும்.
நெல்லையப்பர் கோவிலும் பராமரிக்கப்படும்
தொல்லியல் சின்னங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் கனிம வளம் தோண்டி எடுக்க அனுமதி இல்லை. தாமிரபரணி ஆற்றின் கல் மண்டபங்கள், படித்துறைகள் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோன்று தமிழ்நாட்டில் கலை பொக்கிஷம் நிறைந்த நெல்லையப்பர் கோவிலும் பராமரிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை சபாநாயகர் அப்பாவு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்துவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தலைக்காய உயர் சார்பு சிகிச்சைப் பிரிவு மற்றும் 36 லட்ச ரூபாய் மதிப்பில் நுண்கிருமிகள் நீக்கும் கருவியின் செயல்பாட்டையும் தொடங்கிவைத்தனர்.
இதையும் படிங்க: மலைவாழ் மக்களுக்கு வாகனங்கள் மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகம்