சேலம்: எடப்பாடி அருகிலுள்ள கொங்கணாபுரம் ஊராட்சியில், முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்து பொதுமக்கள் மத்தியில் முதலமைச்சர் கே பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "மக்களின் குறைகள் அறிந்து சேவை செய்ய வேண்டும். அதுதான் அரசு. அந்தவகையில், கரோனா நோய்த் தொற்று, புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பொங்கல் பரிசு அறிவித்திருப்பது சுயநலம் என்று ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். கரோனா, புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பரிசு அறிவித்திருப்பது தவறா என்பதை மக்களாகிய நீங்களே சொல்லுங்கள்.
ஏழை, எளிய மக்களுக்கு தருவதை தடுத்து நிறுத்தியவர்கள் என்றைக்கும் வென்றதாக சரித்திரம் கிடையாது. கரோனா, புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்கள் தைப் பொங்கல் கொண்டாடும் வகையில் அறிவிக்கப்பட்ட திட்டத்தை சுயநலத்தோடு அறிவித்தார்கள் என கூறுவதை நியாயமா என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். பொங்கல் பண்டிகை கொண்டாடும் போது, ஏழை எளிய மக்கள் எவ்வளவு சிரமப் படுவார்கள் என்று தெரியும். ஏழை, எளிய மக்கள் எல்லோரும் வளமும், நலமுடன் வாழ வேண்டும் என்பது தான் மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் லட்சியமாகும்.
அந்த லட்சியத்தை நிறைவேற்றுவது அதிமுக தலைமையிலான மாநில அரசின் எண்ணமாகும். யாரைக் குறித்தும் கவலைப்படவில்லை. மக்களை நினைத்து தான் கவலைப்படுகிறோம். மக்களுக்கு என்ன தேவை என எண்ணி செயல்படும் அரசு எங்கள் அரசாகும். கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி தாருங்கள் என எதிர்க்கட்சி தலைவர் முன்பு கூறினார்.
அதை கொடுத்தால், இப்போது மாற்றி பேசுகிறார். மக்கள் கவனமாக இருக்க வேண்டும். திமுகவினர் மிகப்பெரிய பித்தலாட்டம் செய்வார்கள் " என்று கூறினார்.