சேலம் மாவட்டம் இருப்பாளி கிராமத்திலுள்ள மேட்டுப்பட்டி ஏரியில் ரூ.565 கோடி மதிப்பிலான மேட்டூர் சரபங்கா நீரேற்று திட்டத்துக்கான அடிக்கல்லை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், "இந்த நிகழ்ச்சி வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளது. எந்த நிகழ்ச்சியிலும் கிடைக்காத மகிழ்ச்சி இதில் கிடைத்துள்ளது. குடிமராமத்துத் திட்டம் விவசாயிகள் ஒத்துழைப்போடு நிறைவேற்றப்படுகிறது. இதில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை. மு.க. ஸ்டாலின் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். எங்கெங்கெல்லாம் ஓடை வழியாக நீர் செல்கிறதோ அங்கெல்லாம் தடுப்பணைகள் கட்டப்படும். தமிழ்நாடு அரசு மழை நீரை ஒரு சொட்டு கூட வீணாக்காமல் தடுப்பணைகள் மூலம் நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு தொடர்ந்து வேலை கிடைக்கவேண்டும் என்றால் விவசாயத்திற்குத் தேவையான நீரை வழங்க வேண்டும். அதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். முதல் கட்டமாக 565 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 வறண்ட ஏரிகளில் மேட்டூர் அணை உபரி நீரை நிரப்பும் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அடுத்த 11 மாதங்களில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு விவசாயிகளின் எண்ணமும் நிறைவேறும். இதை வடிவமைப்பு செய்த பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் மக்களின் சார்பில் என்னுடைய நன்றிகள்" என்று நெகிழ்ந்து பேசினார்.
மேலும், "சொன்னதை செய்கின்ற அரசு அம்மாவுடைய அரசு. திட்டத்தை அறிவித்துவிட்டு ஏமாற்றுகின்ற அரசு அல்ல. நீர் மேலாண்மை திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைத்திருந்ததை தற்போது நிறைவேற்றி வருகிறோம். துறை வாரியாக அதிகமாக தேசிய விருதுகள் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. எதிர்க்கட்சியினர் தமிழ்நாட்டில் ஒன்றும் நடக்கவில்லை என்று திட்டமிட்டு பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். எங்களது மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: காமராஜர் பல்கலை. பேராசிரியருக்கு தேசிய விருது வழங்கிய குடியரசுத் தலைவர்