மதுரை : அழிந்துவரும் மஞ்சள் பை பழக்கத்தை மீண்டும் கொண்டுவரத் தமிழ்நாடு முதலமைச்சர் ”மீண்டும் மஞ்சள் பை” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதனை வரவேற்கும் பொருட்டு மதுரை ஆரப்பாளையம், கிராஸ் ரோடு பகுதியில் உள்ள உணவகம் ஒன்று புதிய முயற்சியாக மீண்டும் மஞ்சள் பை புரோட்டாவை அறிமுகப்படுத்தியுள்ளது. பார்சல் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக மஞ்சப்பை வழங்கி ஊக்குவிக்கின்றனர்.
மஞ்சள் பை விழிப்புணர்வு
மதுரையில் உள்ள சுப்பு அசைவ உணவகத்தை நவநீதன் (47), குணா (28) என்ற சகோதரர்கள் நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து உணவகங்களில் நெகிழியைத் தவிர்க்கும் பொருட்டு பார்சல் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக மஞ்சப்பை வழங்கியும் முகக் கவசங்களை வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதேபோல் மதுரையில் கடந்த ஆண்டில் முகக் கவசம் வடிவிலான புரோட்டா அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
Viral Video: வைரலாகும் ’புரோட்டா மஞ்சள் பை’
தற்போது மதுரையில் மீண்டும் மஞ்சப்பை புரோட்டா கலக்கி வருகின்றன. மஞ்சப்பை எப்படி இருக்குமோ, அதே வடிவத்தில் புரோட்டாவை மாஸ்டர்கள் வடிவமைத்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருவது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் அடுத்த இயக்குநராக பேராசிரியர் காமகோடி நியமனம்