மதுரை: தஞ்சை சுவாமிமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க சார்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது.
இந்தச் சங்கத்தில் ஏற்கனவே இருந்த நிர்வாகியால் பல்வேறு வகைகளில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. இது அலுவலர்களின் தணிக்கையிலும் உறுதிசெய்யப்பட்டுள்ளன. நகைக் கடன் வழங்கியதிலும் முறைகேடு நடந்துள்ளது. ஏராளமான நகைகள் மாயமாகியுள்ளன. அடமானம் வைத்தவர்கள் நகைகளை திரும்ப கேட்டு வருகின்றனர்.
வருவாய்த் துறையினர், காவல் துறையினர் முன்னிலையில் சங்கத்தின் வைப்பறையின் பூட்டை உடைத்து உள்ளே இருக்கும் அடமான நகைகள், பணம் மற்றும் ஆவணங்களை சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மனுவை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது அரசு தரப்பில், 572 பேர் நகை கடன் பெற்றுள்ளனர். இதில், 528 பேரின் நகைகள் மட்டுமே உள்ளன. 44 பேரின் 2522.200 கிராம் நகைகள் மாயமாகியுள்ளன. இது குறித்து சுவாமிமலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 572 பேரில் 250 பேர் தங்களின் நகைகளை திருப்பிக் கொள்ள தயாராக இருப்பதாக விண்ணபித்துள்ளனர். இவர்களில், 242 பேரது நகைகள் மட்டுமே உள்ளன. 8 பேரின் நகைகள் மாயமாகியுள்ளன எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நகை கடனை திருப்பிக் கொள்ள தயாராக உள்ள 242 பேரின் விவரத்தை சேகரித்து, உரிய வட்டியைப் பெற்று நகைகளை வழங்கலாம். மீதமுள்ள அடமானதாரர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாயமான 44 பேரின் நகைகளை கண்டுபிடித்து ஒப்படைப்பது குறித்து கூட்டுறவுத் துறை அலுவலர்கள் எஸ்பியிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சுவாமிமலை இன்ஸ்பெக்டரிடம் உள்ள இந்த வழக்கை மாற்றி விசாரணையை எஸ்பி கண்காணிப்பில் கும்பகோணம் டிஎஸ்பி விசாரிக்க வேண்டும்.
இந்த விசாரணையின் நிலை குறித்து எஸ்பி தரப்பில் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஜூலை 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.