மதுரை: மதுரை ரயில்வே கோட்டம் நேற்று (நவம்பர் 27) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வண்டி எண் 06004 நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் டிசம்பர் 26 அன்று நாகர்கோவிலிலிருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் வண்டி எண் 06003 தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து டிசம்பர் 27 மாலை 4 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நாகர்கோவில் வந்துசேரும்.
இந்த ரயில்கள் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுசெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, ஐந்து குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்புப் படுக்கை வசதிப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதிப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு இருக்கை, மாற்றுத்திறனாளிகள் பெட்டிகள் இணைக்கப்படும்.
இந்த ரயில்களில் முன்பதிவு செய்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு நவம்பர் 28 காலை 8 மணிக்குத் தொடங்குகிறது" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணியை நொடியில் காப்பாற்றிய காவலர்!