மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த வடிவு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், " கடந்த மே மாதம் தேதி கொலை வழக்கொன்று தொடர்பாக மூத்த மகன் துரையை விசாரணைக்கு அழைத்துச் செல்ல காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ரகுகணேஷ் ஆகியோர் எனது சகோதரி வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு மூத்த மகன் துரை இல்லாத நிலையில் இளையமகன் மகேந்திரனை அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
2 நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இதனால் அவரது தலை உட்படப் பல இடங்களில் காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஜூன் 13இல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே, மகேந்திரனின் மரணம் குறித்து முறையாக விசாரிக்கவும், எனக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில், "வழக்கு விசாரணை முடிக்கப்பட்டுவிட்டது. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:சாத்தான்குளம் வழக்கின் குற்றவாளி ஜாமீன் மனுவிற்கு சிபிஐ பதிலளிக்க உத்தரவு - உயர் நீதிமன்றக்கிளை