மதுரையின் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்காக முதலமைச்சர் பழனிசாமி ரூ.345 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். பெரியார் நிலையம், வைகை நதி, திருமலை நாயக்கர் மகால் சீரமைப்பு, மதுரையின் முக்கிய சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைத்தல் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக கோயில் மாநகரமாய் அறியப்படும் மதுரை, கடும் சுற்றுச்சூழல் கேடு நிறைந்ததாக மாறி வருகிறது. குறிப்பாக பெரியார் பேருந்து நிலையத்தில் கடந்த ஓராண்டாக நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள், அப்பகுதிகளைக் கடந்து செல்லும் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாக்கி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய வழிகாட்டி மனிதர்கள் அமைப்பின் தலைவர் மணிகண்டன், "தமிழ்நாடு அரசின் முயற்சியால் நடைபெற்று வரும் பெரியார் பேருந்து நிலையப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. என்றாலும், இப்பணியின் காரணமாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சாலைகள்தான் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறாய் அமைந்து வருகின்றன" என்றார்.
சமூக ஆர்வலர் அறிவுசெல்வம் கூறுகையில், "மதுரை நகர் முழுவதுமே தற்போது தூசுகள் நிறைந்ததாய் மாறிவிட்டது. இதற்குக் காரணம் காளவாசல், பெரியார் பேருந்து நிலையம், நத்தம் சாலை, மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள மாசி மற்றும் வெளி வீதிகளிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெறுவதால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தூசுகள் காரணமாக பொதுமக்களுக்கு சுவாசப்பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு உடற்கோளாறுகளும் இயல்பாகிவிட்டன. இதனை உடனடியாக மாநகராட்சி, மாவட்ட நிர்வாகங்கள் சீரமைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
வைகை நதி மக்கள் இயக்கத்தின் துணைத் தலைவர் பழனிவேல்ராஜன் கூறுகையில், "ஆமை வேகத்தில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் மக்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தி வருகின்றன. நாள்தோறும் தூசுகளில் பயணம் செய்வதாலேயே நாளொன்றுக்கு நான்கைந்து முறை குளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்" என்றார்.
நாள்தோறும் இப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெருக்கடி, வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை, செம்மை செய்யப்படாத சாலைகளால் கிளம்பும் தூசி என பாதசாரிகளின் நரகமாக பெரியார்நிலையப் பகுதி காட்சியளிப்பது அன்றாடம் ஆகிவிட்டது.
தற்காலிகமாக அமைக்கப்படும் சாலைகளை தார்ச்சாலைகளாக அமைத்துக் கொடுத்தால் இந்த சிக்கலுக்கு ஓரளவேனும் தீர்வு காண இயலும். அது மட்டுமன்றி, ஒரே நேரத்தில் அனைத்துப் பகுதிகளிலும் பணிகளை மேற்கொள்வதால், அதனால் ஏற்படும் சிக்கல்கள் இன்னும் அதிகம். இதனை உணர்ந்து மதுரை மாநகராட்சி செயல்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
இதையும் படிங்க:
விதை விருட்சமாய் மாறி சமூகத்திற்கு பயன்படட்டும் - அசோக்குமாரின் பயணம் தொடரட்டும்