மதுரை: கோச்சடைப் பகுதியைச் சேர்ந்தவர் எம். ஜெயா. இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்துள்ள மனுவில், “என் மகன் முத்து கார்த்திக்கை மதுரை எஸ்.எஸ். காலனி காவல் ஆய்வாளர் அலெக்ஸ், சார்பு ஆய்வாளர் சதீஷ், காவலர்கள் ரதி, சில காவலர்கள் ஒரு திருட்டு வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அழைத்துச் செல்லப்பட்டவர் மரணம்
அழைத்துச் சென்ற என் மகனை, காவல் நிலையத்தில் மூன்று நாள்களாகச் சட்டவிரோதமாக அடைத்துவைத்துச் சித்திரவதை செய்தனர். பின்னர், பொய் வழக்கில் கைதுசெய்தனர். மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்ட என் மகன் முத்து கார்த்திக் உயிரிழந்தார்.
இதனையடுத்து, என் மகன் மரணமடைந்தது தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்து, காவல் ஆய்வாளர் அலெக்ஸ் உள்பட மூன்று பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தனர். இருப்பினும் அம்மூன்று பேர் மீது இதுவரை துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
எனவே, என் மகன் கொலை வழக்கில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் அலெக்ஸ் உள்ளிட்ட மூன்று பேர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், அரசுத் தரப்பிலிருந்து மனுதாரருக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மனுதாரரின் வழக்கறிஞர் ஆர். கருணாநிதி, மனுதாரர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தார். இது குறித்து அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: மாநில கூட்டுறவுப் பயிற்சி மையத்தை முடக்க வேண்டிய அவசியம் என்ன? - நீதிமன்றம் கேள்வி