மதுரை: திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று (மார்ச் 22) உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குக் கேட்டு பரப்புரைசெய்தார்.
மதுரை தெற்குச் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் பூமிநாதனை ஆதரித்து மதுரை தெற்குவாசல் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரைசெய்தார். அப்போது அவர் பேசியதாவது:
இதே தொகுதியில் சென்ற முறை நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைத் தேடித் தந்தீர்கள். சேப்பாக்கம் தொகுதியில் முதன் முதலாக நிற்கிறேன். இதுதான் எனக்கு முதல் வாய்ப்பு. வெறும் ஐந்து நாள்கள் மட்டுமே அங்கு பரப்புரை செய்துவிட்டு இங்கு உங்களைத் தேடிவந்திருக்கிறேன். அதிமுகவினர் மூன்று ஆண்டுகளாக மோடியிடம் அத்தனை உரிமைகளையும் அடகுவைத்து, அடிமையாகிவிட்டனர்.
இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டையே விற்றுவிடுவார்கள். மக்கள் உரிமை பறிபோகும் நிலை ஏற்படும். தமிழ்நாட்டில் எடுபிடியாக உள்ள எடப்பாடி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பது உங்களுக்குத் தெரியும்.
அவர் பதவிக்காக நான் ஊர்ந்துபோக என்ன பல்லியா, பாம்பா? எனக் கேட்டுள்ளார். அவரைப் பற்றி சசிகலாவிடம் கேட்டால் தெரியும். மாணவர்களின் கல்வி உரிமையை நாம் விட்டுக்கொடுத்துவிட்டோம். கருணாநிதி நீட் நுழைவுத்தேர்வை ரத்துசெய்தார். ஜெயலலிதா இருந்தவரை நுழைவுத் தேர்வு தமிழ்நாட்டில் நுழைய முடியவில்லை. அவரது மறைவுக்குப் பிறகு மருத்துவத்துக்கு நீட் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது.
1,176 மதிப்பெண்கள் பெற்ற அனிதாவின் ஒரே கனவு மருத்துவராவது. ஆனால் அவரது கனவு நீட் தேர்வால் சிதைந்தது. தற்கொலை செய்துகொண்டார். அவரைப்போல் சுபஸ்ரீ, ஏஞ்சலினா உள்பட 14 பேர் நீட் தேர்வுக்குப் பயந்து தற்கொலை செய்துகொண்டனர்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 விழுக்காடு நீட் தேர்வை ஒழித்துக் கட்டுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கடம்பூர் ராஜு கொள்ளையடித்த பணத்தில் ஒரு ஊரையே வாங்கலாம்!