மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," நாள்தோறும் லட்சக்கணக்கானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் . ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். பலர் போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காமல் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
பொதுவாக அரசு மருத்துவமனைகளில் சுகாதாரமின்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூல் செய்வதை குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும். கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் மருத்துவமனைகளை, செயல்படவிடாமல் தடை செய்ய வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, தனியார் மருத்துவமனைகளில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம்தான் கரோனா சிகிச்சைக்காக வசூலிக்கப்படுகிறதா? என்பது குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். மேலும் வழக்கை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.