ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முகம்மது ரஷ்வி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை-ராமேஸ்வரம் வரை 76 கிலோமீட்டர் தொலைவிற்கு நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. பரமக்குடியிலிருந்து ராமேஸ்வரம் வரை 99 கிலோமீட்டர் தூரத்திற்கு இதுவரையில் நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை.
இதனால் பரமக்குடியிலிருந்து ராமநாதபுரம் வரை செல்லும் வழியில் சுமார் 18 கிலோமீட்டர் தூரம் தரமற்ற சாதாரண இரண்டு வழிச் சாலையில்தான் வாகனங்கள் பயணிக்க வேண்டிய நிலையுள்ளது. இந்நிலையில், திடீரென தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் எந்தவித முன்அறிவிப்பும் இன்றி போகலூர் என்ற கிராமத்தில் சுங்கச்சாவடி மையம் அமைத்து அவ்வழியாக வந்து செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலித்துவருகின்றனர்.
மேற்கூறிய இடத்தில் சுங்கச்சாவடி அமைப்பது தேசிய நெடுஞ்சாலைச் சட்டம் 1956, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகள் ஆகியவற்றிற்கு எதிரானது. மேலும் இந்த டோல்கேட்டில் ஆம்புலன்ஸ், மருத்துவ வசதி, நெடுஞ்சாலைத் துறை ரோந்து வாகனம், கிரேன் வசதி, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.
ஆம்புலன்ஸ் போன்ற விதிவிலக்குக்கு உட்பட்ட வாகனங்கள் கடந்து செல்வதற்கும் தனியாக வழிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை. அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள் இவ்வழியில் அவசரமாகச் செல்வதற்கு வசதிகள் இல்லை. எனவே எவ்வித அடிப்படை வசதிகளோ, முறையான கடக்கும் வசதிகளோ இன்றி இந்த டோல்கேட்டில் பணம் வசூலிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்கும் இந்த டோல்கேட்டை உடனடியாக மூடுவதற்கும் உத்தரவிட வேண்டும் ” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் மத்திய, மாநில அரசுகள், டோல்கேட்டில் பணம் வசூல் செய்துவரும் கே.என்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன் என்ற தனியார் நிறுவனம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவையில் போதைப் பொருள் விற்ற தம்பதி கைது!