ஈரோடு: மொடக்குறிச்சி அடுத்த சோளங்காபாளையத்தில் புதிய துணைமின் நிலையத்தின் முதல் சோதனை ஓட்டத்தை தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் இணைந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தனர்.
இந்த துணைமின் நிலையமானது சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில், ரூ.13 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் 217MVA திறன் கொண்டதாகும். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கமணி கூறுகையில், ”திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்தது. அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பொறுப்பேற்ற இரண்டு மாதத்தில் மின்வெட்டு இல்லா மாநிலமாக தமிழ்நாடு உருவாக்கப்பட்டது. இந்தாண்டு மட்டும் 112 துணைமின் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.
பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இருமொழிக் கொள்கைதான் தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு அதுதான் எங்கள் லட்சிய பயணம் என்றார். மேலும், தனியார் பள்ளிகளை விட இந்த ஆண்டு அதிகளவில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்றும், இந்த ஆண்டு கூடுதலாக இரண்டு லட்சம் மாணவர்கள் சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.