ஈரோடு: மாவட்டத்தில் பல இடங்களில் நடைபெற்ற கரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது, “பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் உள்ள ஆசிரியர்கள் வரவில்லையென்றால், பிற ஆசிரியர்களை வைத்து விடைத்தாள் திருத்தப்படும். மேலும், வரும் திங்கட்கிழமை முதல் வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி மாணவர்களின் சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். அதேபோல மாவட்ட ஆட்சியரும் ஒவ்வொரு பள்ளியிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர்” என்றார்
அதேபோல, கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 60 ஆயிரம் குடும்பங்களுக்கு காய்கறிகள் வழங்கும் நிகழ்வை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது, “தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியிலுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அப்பகுதியிலேயே தேர்வு மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வழங்குவது குறித்து 18ஆம் தேதி நடைபெறும் ஆலோனை கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்படும்” என்றார்.