தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக, பண்ணாரி அம்மன் தங்கையாகக் கருதப்படும் சத்தியமங்கலம் ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோயில் கம்பம் நடும் விழா இன்று தொடங்கியது. தமிழகத்திலேயே அதிக உயரம் அகலம் நீளம் கொண்ட 15 அடிக்கு 4 அடி அகலம் கொண்ட கம்பம் இங்குதான் நடப்படுகிறது. இதற்கென வனப்பகுதியில் வளர்க்கப்பட்ட மிகப்பெரிய அளவுக் கம்பம் சுமையுந்து மூலம் கொண்டு வரப்பட்டு நடுவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கம்பம் பவானி ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிறப்பு பூசைகள் செய்து, மீண்டும் கோயிலுக்குக் கொண்டு வந்தனர். சிறப்பு பூசைக்கு பின்னர் பக்தர்கள் முன்னிலையில் கம்பத்துக்கு மாலை அணிவித்து கோயில் முன் நடப்பட்டது. இதையொட்டி, கம்பத்துக்கு மஞ்சள் பூசியும், புனித நீர் ஊற்றியும் பெண்கள் வழிபட்டு வருகின்றனர். வரும் புதன்கிழமை விழாவும் அதைத் தொடர்ந்து மாவிளக்கு பூசையும் நடைபெற உள்ளது. மிகப்பெரிய அளவுள்ள கம்பத்தைக் காண பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் குவிந்த வண்ணமுள்ளனர்.