கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் எம்ஜிஆர் காலனி பகுதியைச் சேர்ந்த அற்புதராஜ், அஞ்சல் ஊழியராகப் பணியாற்றிவருகிறார். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்துவருகிறார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில், தொண்டாமுத்தூர் பகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் ஜார்ஜ் குப்புசாமி என்பவர் தனது வீட்டிற்குச் செல்லும் மூன்று அடி பாதையை மறைத்துள்ளதாக அற்புதராஜ் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தீக்குளிக்க முயற்சி
மேலும் கீழமை நீதிமன்றத்தில் இவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால், அற்புதராஜையும், அவருடைய பிள்ளைகளையும் ஜார்ஜ் அருவருக்கத்தக் சொற்களால் திட்டி இருசக்கர வாகனத்தில் மோதியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை புகார் மனு அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அற்புதராஜ் தனது மூன்று பிள்ளைகளுடன் தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்தி அவரை மீட்டு பந்தய சாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தாயை இழந்த மூன்று குழந்தைகள்
இது குறித்து அற்புதராஜ் கூறும்போது, "எனது வீடு அருகே உள்ள மூன்றடி நிலத்தை தொண்டாமுத்தூர் பகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளராக உள்ள ஜார்ஜ் என்பவர் ஆக்கிரமித்துள்ளார். இதனால் எங்களுடைய வீட்டிற்குச் செல்ல முடியவில்லை. இது குறித்து காவல் துறையிடம் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் அளித்தும் தற்போதுவரை புகார் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே எனது மனைவியை ஜார்ஜ், அவரது மகன்கள் வெட்டி உள்ளனர். தற்போது எனது வீட்டை காலி செய்து வேறு வீட்டிற்கும் சென்றும்கூட, எனது பிள்ளைகள் அவ்வழியாகச் செல்லும்போது ஜார்ஜ் தகாத சொற்களால் திட்டுவது, வாகனத்தை வைத்து மோதுவது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டுவருகிறார்.
இதனால் எனது குழந்தைகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். எனவே இது சம்பந்தமாக அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: வாட்ஸ் ஆப்பில் புகைப்படம் அனுப்பிவிட்டு கர்ப்பிணி தற்கொலை!