கோவை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், இதுவரை 210-க்கும் மேற்பட்டவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர் விவேக் ஜெயராமன், அதிமுக பிரமுகர்கள் சஜீவன், சஜீவனின் சகோதரர் சிபி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, அவரது மகன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் 18 ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளராக பணியாற்றி வந்த பூங்குன்றனிடம் நேற்று வரை 3 நாட்கள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் முக்கிய தகவல்கள் எதுவும் கிடைக்காத நிலையில் போலீசார் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே விசாரணை நடத்தியவர்களையும் மீண்டும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஆறாவது நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த பிஜின்குட்டி சகோதரர் மோசஸ் என்பவரிடம் போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் விசாரணை நடைபெறுகிறது.
இதையும் படிங்க: 13 இடங்களில் காயம்: விக்னேஷ் பிரேத பரிசோதனை அறிக்கையால் அதிர்ச்சி