கோவை: நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள குமரன் ஆலையில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து பெண்கள் வேலைக்காக அழைத்துவரப்பட்டனர்.
வேலைக்காக வந்த பெண்களை ஆலை நிர்வாகம் கொத்தடிமைகளாக கடுமையான வேலை வாங்கியதாக கூறப்படுகிறது. சொந்த ஊருக்கு செல்லவும் ஆலை நிர்வாகம் அனுமதி மறுத்த நிலையில், ஏழு பெண்கள் தங்களை மீட்கும்படி சொந்த ஊருக்கு வாட்ஸ்அப் மூலம் வீடியோ ஒன்றினை அனுப்பினர். இதனையடுத்து அங்கிருந்து கோவை மாவட்ட சிஐடியு அலுவலகத்தை தொடர்புகொண்டனர்.
சிஐடியு அமைப்பினர் ஆலை நிர்வாகத்தை தொடர்புகொண்டு இது குறித்து தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் போதிய
ஒத்துழைப்பு கொடுக்காததால் காவல் துறையில் புகார் அளித்தனர். இந்ந நிலையில் நேற்று (ஜூலை. 29) இரவு பெண் தொழிலாளர்களை ஆலை நிர்வாகம் வெளியே அனுப்பிய நிலையில் அவர்களை சிஐடியு அமைப்பினர் மீட்டனர்.
குறைவான ஊதியத்தை கொடுத்து ஆலை நிர்வாகம் உழைப்பு சுரண்டலில் ஈடுபட்டிருந்ததாகவும், வேலை தேடி வரும் பெண் தொழிலாளர்களை சட்டத்திற்கு உள்பட்டு வேலை வாங்காமல் ஆலை நிர்வாகம் கூடுதலாக வேலை வாங்குவதாகவும் சிஐடியு அமைப்பினர் தெரிவித்தனர்.
மொத்தம் 18 பேர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்துவந்த நிலையில் இதர 11 பெண்கள் நிலை என்னவென்று தெரியவில்லை எனவும் சிஐடியு அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
வேலை நேரத்தை தவிர தொழிலாளர்கள் நடமாட தடை செய்வதே கொத்தடிமை முறைதான் என தெரிவித்த அவர்கள்
பெண்களை சொந்த ஊருக்குச் செல்ல விடாமல் அடைத்து வைத்திருந்த ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மீட்கப்பட்ட ஏழு பெண்களையும் சிஐடியு அமைப்பினர் இன்று (ஜூலை. 30) பிற்பகல் ரயில் மூலம் ஊருக்கு அனுப்பி வைத்தனர். 13 ஆயிரம் ரூபாய் சம்பளம் என அழைத்து வந்து விடுமுறை இல்லாமல் 12 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கியதாக மீட்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடப்படுமா? - எதிர்ப்பார்பில் மக்கள்!