கோயம்புத்தூர்: சின்னத்தடாகம், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. அவற்றில் பல அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன் செங்கல் சூளைகள் செயல்பட நீதிமன்றம் தடைவிதித்தது.
நீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த 10 மாதங்களாக செங்கல் சூளைகள் இயங்காமல் உள்ள நிலையில், செங்கல் சூளைகளை முறைப்படி தொடர்ந்து இயக்க செங்கல் சூளை உரிமையாளர்கள் அனுமதி கேட்டு வருகின்றனர். அந்த வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
படம் பிடித்ததாக..
இந்த நிலையில் நேற்று (ஜன.2) மதியம் சின்னதடாகம் பகுதியை சேர்ந்த, தடாகம் பள்ளதாக்கு மீட்பு குழு செயலாளர் கணேஷ், சமூக ஆர்வலர்கள் ரமேஷ் உள்ளிட்ட மூன்று பேர் சோமையனுர் பகுதியில் டிரோன் கேமரா மூலம் அங்கிருந்த செங்கல் சூளையை படம் பிடித்ததாக கூறப்படுகிறது.
இதனைக் கண்ட அப்பகுதியினர் மற்றும் செங்கல் சூளை ஆதரவாளர்கள், படம் பிடித்தவர்களிடம் கேட்டபோது முறையான தகவல் தெரிவிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.
இந்தத் தாக்குதலில் செங்கல் சூளைகள் ஆதராளர்கள் தரப்பினரான லாரி மெக்கானிக் ரவிசந்திரன் காயமடைந்த நிலையில் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
காவல் நிலையம் முற்றுகை
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தடாகம் காவல் துறையினர் கணேஷ் உள்ளிட்டவர்களை தடாகம் காவல் நிலையத்திற்கு பத்திரமாக அழைத்து வந்தனர்.
டிரோன் கேமரா மூலம் படம் பிடித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்கள், ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
வீடியோ எடுத்தவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் கூறி கோஷங்கள் எழுப்பினர். இதனால் காவல் நிலையம் முன்பு பரபரப்பு நிலவியது.
ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் உரிய விசாரணை நடத்தப்படுமென உறுதியளித்ததைத் தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: ஒமைக்ரான் பரவல் : நீதிமன்றத்தில் நேரடி விசாரணை ரத்து!