ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், நேரு தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை (85). முதுமையிலும் இவர், அம்பத்தூர் ஏரியில் மீன் பிடித்து பிழைப்பு நடத்தி வந்தார். இவரது மனைவி ராஜம்மாள் (75) வீட்டு வேலைகளை செய்து வந்தார். அண்மைக்காலமாக தம்பதியினர் இருவருமே உடல்நலக்குறைவு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தனர். அவர்களுக்கான மருத்துவ சிகிச்சையை உறவினர்கள் அளித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று ஏழுமலை வீட்டில் திடீரென காலமானார். இந்த செய்தியை மனைவி ராஜம்மாளுக்கு நீண்ட நேரத்திற்கு பிறகே உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் அத்தகவலை கேட்ட அவரும் படுத்த படுக்கையிலேயே கண்ணீர் மல்க உயிர் துறந்தார். இதனைக்கணட உறவினர்கள் கதறி அழுதனர்.
மேலும், கணவன் இறந்தது அறிந்து மனைவியும் உயிர் துறந்த செய்தி அப்பகுதி மக்களிடம் காட்டுத்தீ போல் பரவியது. இதனையடுத்து, ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து முதிய தம்பதியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவர்களது உடல்கள் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருமுல்லைவாயல் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இத்தனை ஆண்டு காலம் கணவர் ஏழுமலையின் சுக துக்கங்களில் பங்கெடுத்த ராஜம்மாள், இறப்பையும் பங்கிட்டுக் கொண்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குழந்தையை சாலையோரம் விட்டு சென்ற தாயிடம் விசாரணை - வெளிவந்த உண்மைகள்!