சென்னை துறைமுகம் தொகுதி அன்றுமுதல் இன்று வரை திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்துவருகிறது. 1951ஆம் ஆண்டுமுதல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் மூன்று முறையும், சுயேச்சை ஒருமுறையும், அதிமுக ஒருமுறையும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.
திமுகதான் இங்கே 10 முறை வென்றுள்ளது. குறிப்பாக கருணாநிதி இரண்டு முறையும், பேராசிரியர் அன்பழகன் மூன்று முறையும் இத்தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளனர்.
2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இத்தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாக பி.கே. சேகர்பாபுவும் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் வினோஜ் பி. செல்வமும் அமமுக சார்பில் பி. சந்தான கிருஷ்ணன், மநீம சார்பில் கிச்சா ரமேஷ், நாதக சார்பில் அகமது பாசில் ஆகியோரும் போட்டியிட்டுள்ளனர்.
இன்று காலை முதல் சுற்று முடிவில் பாஜக இரண்டாயிரத்து 524 வாக்குகளும் திமுக இரண்டாயிரத்து 252 வாக்குகளும் பெற்றிருந்தன. தொடர்ந்து இரண்டாவது சுற்று முடிவில் பாஜக மூன்றாயிரத்து 542 வாக்குகளும் திமுக ஆயிரத்து 710 வாக்குகளும் பெற்றிருந்தன. இரண்டு சுற்று முடிவுகளிலும் பாஜக ஆயிரத்து 804 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.
இதனால் திமுகவின் துறைமுகம் கோட்டையில் பாஜக கொடி பறக்கப்போகிறதா என்ற அச்சம் கட்சியினரிடையே ஏற்பட்டது. ஆனால் அடுத்தடுத்து சுற்றுகள் முடிவில் திமுக முன்னிலை வகித்தது.
அதாவது மூன்றாம் சுற்று முடிவில் திமுக இரண்டாயிரத்து 744 வாக்குகளும் பாஜக இரண்டாயிரத்து 110 வாக்குகளும் பெற்றிருந்தன. நான்காம் சுற்று முடிவில் பாஜகவைவிட 408 வாக்குகள் அதிகமாக அதாவது திமுக 12 ஆயிரத்து 52 வாக்குகள் பெற்றது.
ஐந்தாவது சுற்று முடிவில் ஆயிரத்து 694 வாக்குகள் வித்தியாசத்தில் 2 ஆயிரத்து 729 வாக்குகள் பெற்று திமுக முன்னிலை வகித்தது. அஞ்சல் வாக்குகள் அளவிலும் திமுகவே முன்னிலை வகித்தது.
தொடக்கத்தில் பாஜக முன்னிலை வகித்த நிலையில் தற்போது திமுக முன்னிலை வகித்துவருகிறது.