சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் காவல் எல்லைக்குட்பட்ட ராஜகீழ்பாக்கம் சிக்னல் அருகே சேலையூர் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களைப் பிடித்து சோதனை செய்ததில் வாகனத்திற்கு எந்த ஒரு ஆவணங்களும், ஓட்டுநர் அடையாள அட்டையும் அவர்களிடம் இல்லை என தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு இரண்டு நபர்களை சேலையூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் இருவரும் மடிப்பாக்கம், துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் என தெரியவந்தது.
அவர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் செம்மஞ்சேரி பகுதியில் திருடிய வாகனம் என தெரியவந்தது. மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், செம்மஞ்சேரி பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனத்தைக் குறிவைத்து திருடுபவர்கள் எனவும், இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தொடர்பு உடையவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம், இரண்டு சவரன் தங்க நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரையும் மதுராந்தகம் சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.