சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று (செப்டம்பர் 2) நடைபெற்றது. விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி, 'மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவந்தது அதிமுக ஆட்சியில்தான்' எனக் கூறினார்.
அப்போது, குறுக்கிட்ட மா. சுப்பிரமணியன் கூறுகையில், "மத்திய அரசு தமிழ்நாடு மட்டுமல்லாது, பல்வேறு மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனுமதியை வழங்கியது.
பல மாநிலங்களில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது குறித்து அறிவித்தது முதல் எந்தப் பணியும் நடைபெறாத மாநிலம் தமிழ்நாடுதான்.
தற்போது, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகுதான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை மத்திய அரசின் குழு பார்வையிட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை குறித்துப் பேச அதிமுக கூச்சப்பட வேண்டும்" என்றார்.
எய்ம்ஸ் வளாகத்திற்குப் போர்டாவது (பலகை) வைத்திருக்கிறீர்களா, என்னதான் நீங்கள் செய்தீர்கள் என ஆவேசத்துடன் வினா தொடுத்தார் மா. சுப்பிரமணியன்.
இதையும் படிங்க: 'கோடநாடு வழக்கு: தனிப்படை அமைப்பு'