சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையகரகம் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக லோன் மேளா, தனியார்துறையில் வேலைவாய்ப்பு முகாம்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகளை தொழில் முனைவோர் ஆக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் சுயதொழில்களில் ஈடுபடவும், சிறு, குறு தொழில்களில் அடியெடுத்து வைக்கவும், கடன் பெற்று, சுயதொழில் தொடங்க உதவி வருகிறது. மாற்றுத் திறனாளிகள் மானியத்துடன் கூடிய கடன் பெற்று சிறிய பெட்டிக்கடை, மளிகைக் கடைகள், பேன்சி ஸ்டோர்கள், பால்மாடு வளர்த்தல், ஆடு வளர்த்தல், டீக்கடை மற்றும் நொறுக்குத்தீனி ஸ்டால்கள், இட்லி கடைகள், டிபன் கடைகள், கணிணி மையங்கள். ஜெராக்ஸ் நகலகம் ஆகியவற்றை தொடங்கி பயனடைந்து வருகின்றனர்.
தமிழ்நாடு தொழில் முனைவோருக்கான கல்வி மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கிவருகிறது.
இது குறித்து மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையர் ஜானி டாம் வர்க்கீஸ் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் 61 நபர்களுக்கும். சுயதொழில் ஒதுக்கீடு மூலம், 1566 பயனாளிகளுக்கும், ஆவின் பார்லர் அமைக்க 137 பயனாளிகளுக்கும் மானியம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் 5613 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 26.21 கோடி கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.
மாற்று திறனாளிகளுக்கு கடன் உதவி: இத்திட்டத்தினை மாற்றுத் திறனாளிகள் முழுமையாகப் பயன்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட உதவிடும் வகையில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் இணைந்து முதற்கட்டமாக 79 நபர்களுக்கு திட்ட பொருளாதார திறன், திட்ட அறிக்கை தயாரித்தல், திட்ட மதிப்பீடு செய்தல், வங்கிக் கடன் பெறுதல் போன்ற இனங்களில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து, அதன் மூலம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.
இப்பயிற்சி முகாமினை 4ஆம் தேதியன்று காலை 10:30 மணியளவில் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அரசுச் செயலாளர் லால்வினா தொடங்கி வைப்பார் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 415 தனியார் பள்ளிகள் மூடப்படும் அபாயம்!