சென்னை: நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்வியிடங்களை நிரப்புவதற்கான, மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்ட ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த தீக்ஷா என்ற மாணவி அளித்த சான்றிதழ்களில் அலுவலர்களுக்கு சந்தேகம் எழுந்தது. அதனையடுத்த அந்த சான்றிதழை பரிசோதித்ததில், நீட் தேர்வில் வெறும் 27 மதிப்பெண்களே பெற்றிருந்த தீக்ஷா, 610 மதிப்பெண் பெற்றிருந்ததாக போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்தது தெரிய வந்தது. இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், மாணவி தீக்க்ஷா அவரது தந்தையும் பல் மருத்துவருமான பாலச்சந்திரன் ஆகிய இருவர் மீதும் போலியான ஆவணங்களைத் தயாரித்தல், மோசடி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.
சிறையில் உள்ள தந்தையும், மகளும் பிணை கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு நடைபெற்றது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் மூலமே நீட் மதிப்பெண் சான்றிதழ் பெறப்பட்டதாகவும், ஓ.எம்.ஆர் நகல் கோரிய போது தான் இருவேறு நகல் கிடைக்கப் பெற்றதாகவும், தவறு ஏதும் செய்யவில்லை, தேர்வு நடத்தும் அலுவலர்கள் வட்டத்தில் தான் குளறுபடி உள்ளதாகவும் வாதிட்டார்.
தொடர்ந்து, விசாரணைக்கு தாங்கள் ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும், தனக்கு இல்லாவிட்டாலும், தனது மகளுக்காவது பிணை வழங்க வேண்டும் என பாலசந்திரன் தரப்பில் கோரப்பட்டது.
காவல்துறை தரப்பில் ஆஜரான நகர குற்றவியல் வழக்கறிஞர் கௌரி அசோகன், 'இந்த விவாகரத்தில் திட்டமிட்ட மோசடி நடைபெற்றுள்ளதாகவும், இது சமூகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளதாகவும், இவர்களை பிணையில் விடுவித்தால், அது தவறான முன்னுதாரணமாகிவிடும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கும் வகையில் அமைந்து விடும் என்பதால் பிணை வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரர்கள் சமர்ப்பித்த இரண்டு ஓ.எம்.ஆர் நகல்களில் ஒன்றில் தான் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், மற்றொன்றில் எந்த விவரங்களும் இல்லை எனவும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக கூட மனுதாரர்கள் அத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு இருக்கலாம் என குறிப்பிட்டார்.
தீக்க்ஷா வின் தந்தை பாலச்சந்திரன் சாதாரண கூலித்தொழிலாளி அல்ல. மருத்துவர் என்பதால் அவரது மகளுக்கு மருத்துவ இடத்தை பெற இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்கு அவரது மகளும் உடந்தையாக இருந்தது தெரிய வருவதாகவும், சம்பந்தப்பட்ட மாணவி 18 வயது நிரம்பியவர் என்பதால் தனக்கு இதனைப்பற்றி எதுவும் தெரியாது என கடந்து செல்ல முடியாது என தெரிவித்துள்ள நீதிபதி, 12 ம் வகுப்பில் 56 விழுக்காடு மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ள மாணவி, நீட் தேர்வில் 610 மதிப்பெண்கள் எடுத்தார் என்று கூறுவதே சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும்,
காவல்துறையின் நீண்ட தேடலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு, குறுகிய காலமே சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை பிணையில் விடுவித்தால் சமுதாயத்தில் தவறான எடுத்துக்காட்டாக அமைந்துவிடும் என தெரிவித்து இருவரது பிணை மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பவாரியா கொள்ளை கும்பலை கைதுசெய்ய மூன்று வாரம் காலஅவகாசம் அளிப்பு