மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாததால், கடலூரைச் சேர்ந்த மாணவிகள் தர்ஷினி, இலக்கியா ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என நவம்பர் 20ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்த கோரி மாணவிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, காத்திருப்போர் பட்டியலில் உள்ள 60 மாணவர்களுக்கு சேர்க்கை கிடைக்க ஏதுவாக கூடுதல் இடம் உருவாக்க முடியாது எனவும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் இருந்து வழங்கப்பட்ட இடங்களில் 227 இடங்கள் மீண்டும் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர், அதில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் கிடைக்கும் 26 இடங்கள் கொண்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள மனுதாரர்கள் உள்ளிட்ட 60 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறு கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவித்தார்.
மேலும், இந்த 60 மாணவர்களுக்கும் சம வாய்ப்பு, தகுதி, தரவரிசை பட்டியல் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் இன்று (டிசம்பர் 18) விளக்கம் அளிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.