மறைந்த முன்னாள் ஐஜி அருளின் மகன், மைக்கேல் அருள்(76) என்பவரும், அவரது மனைவி ஜெனிபரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதனிடையே, ஜெனிபர் மூன்று கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் நீதிபதிகள் ஜெனிபருக்கு, இரண்டு கோடியே 60 லட்ச ரூபாயுடன், மாதம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மைக்கேல் அருளின் மேல்முறையீட்டு மனு
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த மைக்கேல் அருளின் மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையில் நான்கு வாரத்திற்குள் இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு உத்தரவிடப்பட்டது. ஆனால் மைக்கேல் தொகையை வழங்கவில்லை.
அதன் காரணமாக ஜெனிபர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் மைக்கேல் அருளைக் கைது செய்து 3 மாதம் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
கைது நடவடிக்கை
அதனடிப்படையில், கானாத்தூர் காவலர்கள் போரூரில் மைக்கேல் அருள் நேற்று(ஜூலை.25) கைது செய்தனர். அதைத்தொடர்ந்து அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு இன்று உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா இழப்பீடு தாமதம் ஏன்? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!