பெருநகர சென்னை மாநகராட்சியின் முதன்மை தலைமை பொறியாளராக புகழேந்தி என்பவர் பணியாற்றிவந்தார்.
அவரது பணிக்காலம் முடிவடைந்து ஓய்வுப்பெற காத்திருந்த நிலையில், அவருக்கு மாநகராட்சி நிர்வாகம் இரண்டாண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, பணி நீட்டிப்பு பெற்ற புகழேந்தி நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமை பொறியாளராக நியமிக்கப்பட்டார்.
இதன் காரணமாக நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமை பொறியாளராக பணியாற்றிவந்த நடராசன், சென்னை மாநகராட்சியின் முதன்மை தலைமை பொறியாளராக பணியிடம் மாற்றப்பட்டார்.
தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு எதிராக நடராசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில், “நகராட்சி விதிகளுக்கு மாறாக நிர்வாக ஆணையரக தலைமை பொறியாளராக புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
பணி நீட்டிப்பு வழங்கப்பட்ட அவருக்கு நிர்வாக ஆணையரக தலைமை பொறியாளராக பணி நியமனம் பெற எந்தத் தகுதியும் இல்லை. எனவே, அவரது பணி நியமனத்தை ரத்து செய்து மீண்டும் தன்னை அந்த பதவியில் நியமிக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவானது, சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி பார்த்திபன் தலைமையிலான அமர்வின் முன்பாக இன்று (டிச.23) விசாரணைக்கு வந்தது.
![Set aside pugalenthi appoint as municipality commissioner after his retirement, MHC order](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-municipalitycommissionerappointmentquashd-script-7204624_23122020145256_2312f_1608715376_631.jpg)
அப்போது நீதிபதி பார்த்திபன், “ நகராட்சி நிர்வாகத் துறையின் தலைமைப் பொறியாளராக புகழேந்தி நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டார். அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சட்டவிரோதமாக பணி நீடிப்பு வழங்க முடியாது.
அவருக்கு நிர்வாக ஆணையரக தலைமை பொறியாளர் பதவி வழங்குவதற்கு எந்தவொரு முகாந்திரமும் இல்லை. சிறப்பு தகுதியோ, அந்த பதவிக்கு நியமனம் பெற அனுபவமோ இருப்பதாக கூற எந்த சான்றும் நீதிமன்றத்தின் முன்பு சமர்பிக்கப்படவில்லை.
முக்கிய தலைமை பதவியில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும்போது, தகுதியானவர்கள் இல்லாதபோது தான் நியமிக்க வேண்டும் என்ற விதி இருக்கையில் புகழேந்திக்கு வழங்கப்பட்ட நியமனம் அசாதாரண சலுகையாகவே காணப்பட வேண்டும்.
எனவே, அவரது பணி நியமனத்தை ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் நடராசனுக்கு மீண்டும் நகராட்சி நிர்வாகத் துறையின் தலைமைப் பொறியாளர் பணியை வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : புறநகர் மின்சார ரயிலில் இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி!