சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை மின்சார வாரியத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.
பிறகு பேசிய அமைச்சர், 'மின் வாரியத்தில் காலிப்பணியிடங்கள் தொடர்பான கணக்கீடு செய்யப்பட்டு முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் சென்னை மாநகராட்சிப் பகுதியில் புதைவடக் கம்பிகள் அமைக்கும் பணிகள் வரும் ஆண்டிற்குள் 100 விழுக்காடு முடிவடையும்' எனவும் தெரிவித்தார்.
மருத்துவ வல்லுநர்களின் கருத்துக்களின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் நேர குறைப்பு குறித்து முடிவு செய்யப்படும் எனக் கூறிய அவர் "தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
இதுவரை 26,384 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 60,777 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிற நிலையில் 12,000 விவசாயிகளின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெற்று வருவதாகவும்," தெரிவித்தார்.
மேலும் 8,905 புதிய மின் மாற்றிகள் அமைக்கும் மார்ச் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும்; சென்னையில் வட கிழக்குப் பருவ மழையால் மழை நீர் தேங்கும் 1,430 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு ஒரு மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டு 341 இடங்களில் மின் இணைப்புக்கான பில்லர் பாக்ஸ் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மீதமுள்ள 1,079 பில்லர் பாக்ஸ் மார்ச் மாதத்திற்குள் உயர்த்தப்படும் எனவும்; இதன்மூலம் சென்னையில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கினாலும் பொது மக்களுக்கு மின் இணைப்பு தடையின்றி கிடைக்கும் எனவும் கூறினார்.
வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணி
தமிழ்நாடு மின்சார வாரியம் இதுவரை இல்லாத அளவிற்கு வளர்ச்சி பெற்று புதிய பாதையில் பயணித்து வருகிறது என்றும் தமிழ்நாடு மின்சார ஆணையம் முழுவதும் கணினி மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் 3 கோடியே 22 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன எனவும் அமைச்சர் கூறினார்.
"மின்மாற்றியில் பொருத்தும் டி டி மீட்டர் பொருத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மின் வயர்கள் அறுந்து விழும் பட்சத்தில் தானாகவே ட்ரான்ஸ் பார்மரிலிருந்து மின்சாரம் தானாகவே துண்டிக்கக்கூடிய வகையில் நவீன மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் உயிரிழப்புகள் தடுக்கப்படும்," எனவும் அமைச்சர் விளக்கினார்.
வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணி தொடங்கும். இதன்மூலம் ஒரு விழுக்காடு மின் இழப்பு தடுக்கப்படும் எனவும், இதனால் ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் அரசுக்கு செலவு குறையும் எனவும் தெரிவித்த அமைச்சர்,
மின் வாரியத்தில் காலிப்பணியிடங்கள் தொடர்பான கணக்கீடு செய்யப்பட்டு முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதற்காக ஒப்பந்தப் பணியாளர்கள் குறித்த முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது எனவும்; முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு பணி நிரந்தரம் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் கூறினார்.
கோடை காலத்தில் மின்தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும்; மேலும் தாழ்வானப் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்கள் ஆய்வு செய்யபட்டு மதிப்பீடுகள் கோரப்பட்டுள்ளன எனவும்;
சென்னை மாநகராட்சிப் பகுதியில் வரும் ஆண்டிற்குள் 100 விழுக்காடு மின் கம்பிகள் புதைவட கம்பிகளாக மாற்றப்படும் எனவும் தெரிவித்த அவர் "மருத்துவ வல்லுநர்களின் கருத்துகளின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் நேரக் குறைப்பு குறித்து முடிவு செய்யப்படும்," என்றார்.
இதையும் படிங்க: நெருக்கமாக பழகவிட்டு வீடியோ எடுத்து பணம் பறிக்கும் திமுக பிரமுகர்- இளம்பெண் கண்ணீர்