சென்னை: தமிழ்நாட்டு வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கு தொடர்ச்சி மலையில் வளர்ந்துள்ள அன்னிய மரங்களை அகற்றுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்த முடியாது என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக தமிழ்நாடு அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைக் கேட்ட நீதிபதிகள், வேலையே செய்யாமல் வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்குகிறார்கள் என வேதனை தெரிவித்ததுடன், மேற்கு தொடர்ச்சி மலையில் அன்னிய மரங்களை அகற்ற மலைவாழ் மக்களை பயன்படுத்தலாம் எனவும், 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் நிதியை பயன்படுத்தும்போது அது அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.
பின்னர், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மலை வாழ் மக்கள் மூலம் அன்னிய மரங்களை அகற்ற, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியை பயன்படுத்தலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்க, மத்திய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு (ஏப்ரல் 19) ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: வாடிக்கையாளருக்கு ரூ.6 லட்சம் வழங்க ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கிக்கு உத்தரவு