செங்கல்பட்டு: வண்டலூர் உயிரியல் பூங்கா ரயில்வே நிறுத்தம் அமைக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த திருவேங்கடம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ரயில் நிலையம் அமைப்பது தொடர்பான சாத்திய கூறுகள் குறித்து ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், ரயில் நிலையம் அமைக்க கோரி 2017இல் அளித்த மனு மீது, ரயில்வே துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இந்த பகுதியில் ரயில்வே நிறுத்தம் அமைத்தால் எத்தனை பயணிகள் வருவார்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய ரயில்வே துறைக்கு உத்தரவிட்டார்.
மேலும், கோரிக்கை தொடர்பாக 4 வாரங்களில் புதிய மனுவை ரயில்வே துறைக்கு அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த கோரிக்கை மனுவை பரிசீலித்து 8 வாரங்களில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெற்கு ரயில்வேவிற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.