சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி சென்னையில் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் அதிமுக உட்பட கூட்டணி கட்சித்தலைவர்கள் பங்கேற்றனர்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனியாக வந்து மேடையில் இருந்த திரெளபதி முர்முவுக்கு ஆதரவு தந்தனர். அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணி சார்பாக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், அன்பழகன், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, நத்தம் விஸ்வநாதன், பா.வளர்மதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அப்போது, நிகழ்ச்சி நடைபெறும் ஹோட்டலுக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் விழா மேடைக்கு வரவில்லை.
எடப்பாடி பழனிசாமி அணியினர் விழாவை நிறைவு செய்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் விழா மேடைக்கு வந்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தனியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தனியாகவும் மேடைக்கு வருவது உட்கட்சியில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளதைக் காட்டுகிறது.
இந்த நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களிடம் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு தனது ஆதரவை கோரினார்.
இதையும் படிங்க: ஹைதராபாத்தில் செயற்குழு கூட்டம் - தென் மாநிலங்களுக்கு பாஜக ஸ்கெட்சா...?