தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சி தற்போது ஐம்பது நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், விதிமுறைகளை மீறியதாகவும் கூறி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதையடுத்து, மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில், அதன் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா தலைமையில் சென்னை நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும். நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், எந்தவித விளக்கமுமின்றி வெளியேற்றப்பட்டுள்ளார். நடந்த காரணங்களை எடுத்துக் கூற முற்பட்டபோதும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அதனை கூற விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார்.
மதுமிதா எதனால் தற்கொலை செய்ய முயற்சித்தார்? எதற்காக அந்த முடிவை எடுத்தார்? அவர் தற்கொலை செய்யும் அளவிற்கு எவ்விதத்தில் மன ரீதியான உளைச்சலை ஏற்படுத்தினார்கள்? என்பது குறித்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அனைவரிடமும் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.