சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளில் 2.10 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன என ஈஷா அறக்கட்டளையின் ஒரு அமைப்பான காவேரி கூக்குரல் இயக்கம் தெரிவித்துள்ளது.
சென்னை பத்திரிகை மன்றத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மூன்று விவசாயிகள் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாகப் பேசினர். மூன்று விவசாயிகளும் தங்களுக்கும் ஈஷா அறக்கட்டளைக்கும் எந்தவிதச் சம்மந்தமுமில்லை.
மேலும் மற்ற அறக்கட்டளைகளைவிட தாங்கள் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் மரக்கன்றுகளைக் குறைவான விலைக்கு வாங்குவதாகவும், தங்களுக்கு விவசாயம்தான் முக்கியம் எனத் தெரிவித்தனர். எந்த ஒரு மரக்கன்றும் ரூபாய் 3-க்கு கிடைப்பதாகக் கூறினர்.
இது குறித்து காவேரி கூக்குரல் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கடந்த இரண்டு ஆண்டுகளில் 2.10 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும் இந்த இயக்கம் மூலம் தமிழ்நாடு, கர்நாடகாவில் உள்ள விவசாயிகளைக் கொண்டு இந்தாண்டு 2.5 கோடி மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இவ்வியக்கத்தின் மூலம் இதுவரை 2.10 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவுசெய்து சாதனை படைத்துள்ளனர். அத்துடன், 1.25 லட்சம் விவசாயிகள் மரம்சார்ந்த விவசாய முறைக்கு மாறியுள்ளனர்" எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக, விழுப்புரம் மாவட்டத்தில் ஆயிரத்து 700 விவசாயிகள் 6.33 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளனர் எனவும், அதற்கு அடுத்தபடியாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரத்து 600 விவசாயிகள் 5.29 லட்சம் மரக்கன்றுகளையும், சேலம் மாவட்டத்தில் இரண்டாயிரத்து 500 விவசாயிகள் 5.26 லட்சம் மரக்கன்றுகளையும் நட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டு கால ஈஷாவின் சுற்றுச்சூழல் களப் பணியின் காரணமாக இதுவரை 6.5 கோடி மரக்கன்றுகள் விவசாயிகள், பொதுமக்கள் மூலம் நடப்பட்டுள்ளன. இதற்கு முன்பு சத்குரு தொடங்கிய ‘நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்’ இயக்கமும் மக்களிடம் மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வெற்றிபெற்றது.
அவ்வியக்கம் தயாரித்த நதிகளை புத்துயீருட்டுவதற்கான விரிவான செயல்முறைகள் அடங்கிய 700 பக்க வரைவு அறிக்கையை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அதைச் செயல்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, சத்தீஸ்கர், உத்தரகாண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா ஆகிய ஆறு மாநிலங்கள் இப்பரிந்துரைகளைத் தங்கள் மாநிலங்களில் சொந்தமாகச் செயல்படுத்திவருகின்றன எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ. 500 கோடி கிராவல் திருட்டு வழக்கு: ஓபிஎஸ் உதவியாளர் மீது வழக்குப்பதிவு - நீதிமன்றத்தில் அறிக்கை