சென்னை: சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஜி.கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "திருவண்ணாமலை கிரிவலப் பாதையும், மாநில நெடுஞ்சாலையும் இணையும் வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான 92.5 அடி நிலத்தை வாங்கிய ஜீவா கல்வி அறக்கட்டளை, அருகில் உள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அமைக்க உள்ளது.
சிலையை கிரிவலப்பாதையில் அமைப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவர். அப்பகுதியில் கால்வாய் அமைந்துள்ளதால், அங்கு கட்டுமானம் மேற்கொண்டால் நீர் போக்குவரத்து பாதிக்கப்படும். எனவே, சிலை அமைக்கத் தடை விதிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவிட்டது. மேலும், குறிப்பிட்ட நிலத்தில் சிலை அமைக்க இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டது. இந்த தடையை நீக்கக்கோரி ஜீவா கல்வி அறக்கட்டளை சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் முகமது சபீக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிலை அமைக்கப்படவுள்ள குறிப்பிட்ட நிலம், பட்டா நிலம் என ஜீவா கல்வி அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள், பிரதான வழக்கு மற்றும் தடை நீக்க கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: பாஜகவில் இணைகிறாரா சசிகலா? - அண்ணாமலை பதில்!