தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் மழலையர், நர்சரி, பிரைமரிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர் அங்கீகாரம் பெற வேண்டும். அதற்கான அங்கீகாரத்தினை மாவட்டக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும்.
தொடக்கக் கல்வித்துறையில் ஆண்டுத்தோறும் அங்கீகாரம் பெறாத பள்ளிகளை மூட வேண்டும் என தொடர்ந்து அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் தொடர் அங்கீகாரம், இல்லாமல் பள்ளிகள் சில இயங்கி வருகின்றன.
இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர் வகுப்பில் செல்வதிலும் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகிறது. இச்சூழலில் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பழனிசாமி மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடித்ததில், "குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டயாகக் கல்வி உரிமைச்சட்டம் 2009இன் பிரிவு 18இல் அங்கீகாரம் சான்றிதழ் இல்லாமல் எந்தப் பள்ளியும் செயல்பட கூடாது. தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், சுயநிதியில் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், மழலையர்கள் மற்றும் இளம் மழலையர் பள்ளிகள் ஆகியவை தொடக்க அனுமதி, அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் குறித்த விபரங்களை அனுப்ப வேண்டும்.
மேலும், அங்கீகாரம் பெறுவதற்குரிய முழுமையாக விண்ணபிக்காத பள்ளிகளை உடனடியாக 2020-2021ஆம் கல்வியாண்டுடன் மூடுதல் வழிகாட்டுதல் விதிமுறைகளின்படி, அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை வேறுப் பள்ளியில் சேர்க்க நடடிக்கை எடுக்க வேண்டும்.
தொடக்க அனுமதி மற்றும் தொடர் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு பள்ளியை மூடுவதற்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். தொடக்க அங்கீகாரம், தொடர் அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்படுமானால், அந்தப் பள்ளி இயங்கும் பகுதியின் வட்டாரக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலரே பொறுப்பேற்க வேண்டும்" என கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இயங்கி வரும் சுமார் 5000 ஆயிரத்திற்கு மேற்பட்ட பள்ளிகள் தொடர் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருவதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.