சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளி திறப்பது தொடர்பாக பொற்றோர்களிடம் நாளையும், நாளை மறுநாளும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி அதன் கருத்து தொகுப்பினை, 7ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட கல்வி அலுவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளி திறப்பது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள், உதவித் தலைமை ஆசிரியர்களின் தலைமையில் கோவிட் 19 வழிகாட்டு நெறிமுறைகளுக்குள்பட்டு பெற்றோர்களிடம், 6, 7 ஆகிய தேதிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி பெற்றோர்களின் கருத்து தொகுப்புகளை 7ஆம் தேதி மாலைக்குள் மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
பெற்றோர்களிடம் நடத்தப்படும் கருத்துக் கேட்புக் கூட்ட நிகழ்வினை ஒளிப்பதிவு செய்து தலைமை ஆசிரியர்கள் வசம் வைத்திருக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.