சென்னை: சாலை விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு செலான் வழங்கப்பட்டு போக்குவரத்து காவல் துறையினர் அபராத தொகை பெற்று வந்தனர். அபராத தொகையை கைகளில் பெற்று வந்ததால் போக்குவரத்து காவல் துறையினர் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை போக்கும் வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பணமில்லா பரிவர்த்தனை முறை நடைமுறைக்கு வந்தது.
வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை மீறினால் அவர்களின் நம்பர் பிளேட்டை பதிவு செய்து மொபைல் எண்ணுக்கு அபராத தொகை செலுத்தும்படி பல இடங்களில் ஏ.என்.பி.ஆர் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனால் சாலை விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அனுப்பக்கூடிய அபராத தொகையை, பல வாகன ஓட்டிகள் செலுத்தாமல் இருப்பதால் பல லட்சம் செலான்கள் நிலுவையில் இருந்து வந்தது.
இந்த நிலுவை தொகையை வாகன ஓட்டிகளிடம் இருந்து பெறுவதற்காக கடந்த 11 ஆம் தேதி போக்குவரத்து அழைப்பு மையங்கள் சென்னை காவல்துறையால் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக வேப்பேரி, கீழ்ப்பாக்கம் உள்பட 10 போக்குவரத்து அழைப்பு மையங்கள் அமைக்கப்பட்டன. அண்ணா நகர் troz மற்றும் ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் மூலமாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கையாள்வதற்காக மேலும் இரண்டு அழைப்பு மையங்கள் அமைக்கப்பட்டன.
இந்த அழைப்பு மையங்கள் மூலமாக அபராதத் தொகை நிலுவையில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு போன் செய்து நிலுவையில் உள்ள விதிமீறல்கள் குறித்து தெரிவித்ததுடன் அபராத தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது. அபராத தொகையை செலுத்த தவறினால் மெய்நிகர் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படும் என போக்குவரத்து காவல் துறையினர் அறிவுறுத்தினர். அதன்படி கடந்த 11ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 10 அழைப்பு மையங்கள் மூலமாக 2,389 தொலைபேசி அழைப்புகள் செய்யப்பட்டன.
இதன் மூலம் கடந்த 11 நாள்களில் மட்டும் 55, 885 வழக்குகளில் ஒரு கோடியே 41 லட்சத்து 43 ஆயிரத்து 542 ரூபாய் அபராதத் தொகை பெறப்பட்டுள்ளது. அதில் 100-க்கும் மேற்பட்ட சாலை விதிமீறல்களில் ஈடுபட்டதாக 9 வாகன ஓட்டிகளிடம் இருந்து ஒரு லட்சத்து 37 ஆயிரம் அபராதத் தொகை பெறப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட சாலை விதிமீறல்களில் ஈடுபட்டதாக 43 வாகன ஓட்டிகளிடம் இருந்து 3 லட்சத்து 43 ஆயிரத்து 475 ரூபாய் அபராதத் தொகை பெறப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட சாலை விதிமீறல்களில் ஈடுபட்டதாக 158 வாகன ஓட்டிகளிடம் இருந்து 5 லட்சத்து 57 ஆயிரத்து 760 ரூபாய் அபராதத் தொகை பெறப்பட்டுள்ளது.
223-க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட அனைத்து வாகன உரிமையாளர்களிடம் இருந்து மொத்த அபராத தொகையும் வசூலிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 10 நபர்களிடமிருந்து 1,393 வழக்குகளுக்காக மொத்தம் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 900 ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு பகுதியாக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் செலுத்துவதற்கான சிறப்பு தணிக்கை தொடங்கப்பட்டு 197 வழக்குகளில் மொத்தம் 19 லட்சத்து 81 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு 10,000 ரூபாய் அபராதத் தொகை பெறப்பட்டுள்ளது.
வாடகை வாகன நிறுவன உரிமையாளர்கள் தங்களது அனைத்து வாகனங்களுக்கும் நிலுவையிலுள்ள அபராத தொகை செலுத்த முன்வந்துள்ளனர். இதில் குறிப்பிடும்படியாக ஒரே நிறுவனம் 17 வாகனங்களில் நிலுவையிலுள்ள விதிமீறல்களுக்காக மொத்தமாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளது.
அபராதம் செலுத்துவதற்கான வசதியை மேம்படுத்த மொத்த எஸ்.எம்.எஸ் அமைப்பு, கட்டண வசதி மையம் மற்றும் கட்டண தளங்களுடன் ஒப்பந்தம் உள்ளிட்ட கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது. அனைத்து வாகன ஓட்டிகளும் அபராதத் தொகையை விரைவில் செலுத்துமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: PBKS vs CSK: பஞ்சாபிடம் பம்மியது சிஎஸ்கே - ராயுடுவின் வாணவேடிக்கை வீண்!