சென்னை: சென்னை சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் விஷ்வநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "மாமல்லபுரத்தில் உள்ள முதலை பூங்காவில் கூடுதலாக இருக்கும் ஆயிரம் முதலைகளை குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள விலங்கியல் மறுவாழ்வு மையத்திற்கு இடமாற்றம் செய்ய மத்திய, மாநில அரசு அனுமதியளித்துள்ளன.
56 முதலைகளை மட்டுமே பராமரிக்கூடிய 7 ஆயிரத்து 300 சதுர மீட்டர் இடத்தில் ஆயிரம் முதலைகளை அடைக்கப்போகிறார்கள். இதனால், இடமாற்றம் செய்ய அனுமதியளித்தது சட்டவிரோதம். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். சட்ட விரோதமாக அனுமதியளிக்கப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் வனவிலங்கு காப்பாளர், மத்திய வன உயிரின ஆணையம், குஜராத்தில் உள்ள கிரீன்ஸ் வனவிலங்குகள் மீட்பு மறுவாழ்வு மையம், மாமல்லபுரம் முதலை பூங்கா நிர்வாகம் உள்ளிட்டவை 3 வாரங்களில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.