சென்னையில் உள்ள பச்சையப்பன் அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், தகுதியற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தி உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், தகுதியற்ற கல்லூரி ஆசிரியர்களை நியமித்தால் மாணவர்கள் பாதிக்கப்படுபவார்கள் என்று தெரிவித்துள்ளார். ஆசிரியர் பணியிடங்களை நியமிப்பதற்கான கல்வி தகுதி விஷயத்தில் சமரசம் செய்துகொள்ள முடியாது என்றும், கல்லூரி நிறுவனங்களில் நிர்வாகிகள் ஆசிரியர் கல்வித் தகுதி விஷயத்தில் எந்த ஒரு அனுதாபமோ, சமரசமோ காட்டக்கூடாது என்றும், சமரசம் என்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆகையால், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் தகுதிகளை சரி பார்க்க வேண்டும் என்றும், இது சம்பந்தமாக தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கல்லூரி கல்வி இயக்குநர் விசாரணை நடத்துவதற்கு தகுதியான அதிகாரி என்பதனால், கல்லூரிகளில் செய்யப்பட்ட நியமனங்கள் முறையானதா? சரியானதா? என்பதை கல்லூரி கல்வி இயக்குநர் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.
ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 254 பேராசிரியர்களுக்கு சம்மன் அனுப்பி அவர்களுடைய கல்வி தகுதி மற்றும் அசல் ஆவணங்களை சரி பார்க்க வேண்டும். நவம்பர் 14ஆம் தேதி இதுகுறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் கல்லூரி கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டு உயர் நீதிமன்ற நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: தமிழ் வளர்ச்சிதுறைக்கு பாராட்டுகளைத் தெரிவித்த உயர் நீதிமன்றக்கிளை - காரணம் என்ன?