சென்னை: மத்தியப் பிரதேச மருத்துவ கல்வி அமைச்சர் விஷ்வாஸ் சாரங் கரோனாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் வந்து பார்வையிட்டார்.
அப்போது தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அத்துறை செயலாளர் ராதாகிருஷ்னன் உடனிருந்தனர். விஷ்வாஸ் சாரங், டி.எம்.எஸ் வளாகத்திலுள்ள 108 கட்டுப்பாடு அறை, கரோனா கட்டுப்பாடு அறை ஆகியவற்றை பார்வையிட்டார். பிறகு கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "மத்தியப் பிரதேச அமைச்சர், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் சுகாதாரத் துறை நடவடிக்கைகளை பார்வையிட்டு கேட்டறிந்தார். இந்த மழை, புயல், வெள்ள காலத்திலும் மேற்கொள்ளப்பட்ட உரிய நடவடிக்கை காரணமாக, கரோனா கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளோம்.
புயலுக்காக ஒரு வாரத்தில் மட்டும் பல்வேறு நடவடக்கை எடுத்துள்ளோம். 8 ஆயிரத்து 456 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 435 நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் 3657 முகாம் நடத்தப்பட்டு, 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து நீரேற்ற நிலையங்களிலும், குளோரினேஷன் முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் லாரிகள், புயல் காலங்களில் மழைநீர் வடிந்து கொண்டிருக்கும் இந்தச் சூழலில் குளோரினேஷன் இல்லாமல் தண்ணீர் எடுத்துச் சென்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நடமாடும் மருத்துவக் குழுக்கள், சிறப்புப் மருத்துவ குழு உள்ளிட்ட அனைத்தும் தமிழ்நாட்டில் தயார் நிலையிலுள்ளது.
முதலமைச்சர் சொல்லும் அனைத்து அறிவிப்புகளிலும் சுகாதாரத் துறை உறுதியாக உள்ளோம். 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பெற்று கொடுத்தது போல, கரோனா தடுப்பூசி முதன்முதலாக எந்தவித கட்டணமும் இல்லாமல் தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். மத்திய அரசு அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது" என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய பிரதேசத்தின் மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் விஷ்வாஸ் சாரங், "கரோனா காலத்திலும் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கு தன்னுடைய பாராட்டு.
சுகாதார பணிகளில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டுவருகிறது. சுகாதாரத் துறை பொறுத்த வரை மற்ற மாநிலங்களில் உள்ள நல்ல பணிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் இங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகளை நேரடியாக வந்து பார்வையிட்டேன்.
மருத்துவ கல்வியில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் தமிழக மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம். இது குறித்து முதலமைச்சரையும் சந்தித்துப் பேச உள்ளோம்" என தெரிவித்தார்.